நீ அங்கே… நான் இங்கே…!

அன்று…

பத்தியம் கிடந்து
பொறுமை காத்து
என்னை ஈந்தாய்…!

வெள்ளி நிலவு காட்டி
என்னில் குதூகலமூட்டி
சோறூட்டினாய்…!

எனக்காய்
தேர்வுக்குப் படித்து
நீ மாணவியானாய்…!

நான் நலம் குன்றிய
நாட்களிலெல்லாம்
நீ குறுகிப் போனாய்…!

என் சம்பாத்தியத்தில் வீடு
வாங்கிய பொழுது உலகையே
வாங்கியது போல் மகிழ்ந்தாய்…!

என் திருமணத்தின் போது
யுவதியைப் போல் ஓடோடி
வேலை செய்தாய்…!

என் பிள்ளை விளையாட
நீ யானையாய்
மாறினாய்…!

அப்போதெல்லாம் புரியவில்லை
உன் அன்பு…!

இன்று….

நீ அங்கே உனக்காய்
நான் பணம் கட்டிய
முதியோர் இல்லத்திலும்…,

நான் இங்கே எனக்காய்
நீ பாசத்தால் கட்டிய
நம் இல்லத்திலும்…

இப்போது புரிந்து மட்டும்
என்ன ஆகிவிடப் போகிறது…???

4 thoughts on “நீ அங்கே… நான் இங்கே…!

  1. அன்றும் …………. இன்றும்
    ஆளையே மாற்றியுள்ளது
    அன்பையே பறித்துள்ளது
    மிகவும் கொடுமை –
    நன்றிகெட்ட பிள்ளைகள்.

    நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். vgk

    • \\அன்றும் …………. இன்றும்
      ஆளையே மாற்றியுள்ளது
      அன்பையே பறித்துள்ளது
      மிகவும் கொடுமை –
      நன்றிகெட்ட பிள்ளைகள்.

      நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். vgk//

      என்ன செய்வது சார், அப்பாவிகளுக்காக பரிந்து பேசும் அதே நேரம் நன்றி கெட்டவர்களின் தவறை சுட்டிக் காட்டுவதும் நம் கடமைதானே…!
      நன்றி சார்

ரிஷபன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி