காதல்…
மூன்றெழுத்தில் ஒரு சுகானுபவம்…
மூன்றெழுத்தில் ஒரு பிரளயம்…
மூன்றெழுத்தில் ஒரு பெரும் பிரச்சினை…
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், அவரவர் விருப்பத்தையும், அனுபவத்தையும் பொருத்து.

புராணங்களில் ஒவ்வொரு காரண காரியத்திற்கும் சூத்திரதாரியாய் விளங்கியது இதுவே. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளுக்காக இறைவனே இறங்கி வர காரணம் இந்தத் தூய்மையான காதலே. சபரிவாசன் தோன்றவும் சிவபெருமான் மோகினியின் மீது கொண்ட காதல்தானே காரணமாயிற்று. தசரத ராஜன் தன் காதல் மனைவிக்குக் கொடுத்த வரத்தினாலேயே ஸ்ரீ ராமபிரான் காடு செல்ல நேர்ந்தது.சீதாப்பிராட்டியின் மீது கொண்ட காதலினாலேயே பத்துத் தலை இராவணன் செத்துத் தொலைய நேர்ந்தது. ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இடையில் இருந்ததுகூட காதல்தான்.
காதலைப் பற்றிய வார்த்தைகள் இடம்பெறா இலக்கியங்கள், மக்களின் நினைவுகளிலும் இடம்பெற்றதில்லை. காதலைப் பற்றியே கவிஞர்களின் மூச்சு வலம் வருகிறது.காதலைப் பற்றி எழுதாத எழுத்தாளர்கள் அரியவர்கள்.இப்படியாய் இலக்கியங்களையும் இந்தக் காதல் விட்டு வைத்து விடவில்லை.
அகிலத்தையே வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் கூடத் தனது அந்தரங்கத்தில் ஒரு காதலியைப் பெற்றிருந்தான். சரித்திர காலப் போர்களில் காதலின் பங்கு கணிசமானது. உலகமே வியந்து போற்றும் தாஜ்மகால் கூட ஷாஜஹானின் காதலிக்காகக் கட்டப்பட்ட கல்லறைதான். இப்படியாய், வரலாறின் காதலும் கூட வியக்கவே வைக்கிறது.
இன்றளவில் காதல் எப்படியாகிவிட்டது தெரியுமா?
கடற்கரைக் காதல், அலுவலகக் காதல், வலை மையக் காதல், உண்மைக்காதல் இப்படி வகை பிரிக்கும் நிலையில் இருக்கிறது. தொண்ணூறு சதவிகித காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கும், பத்து சதவிகிதம் மட்டுமே வெற்றி பெறவும் இதுவே காரணம்.

” இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்தானடா” என சொன்னாலும் கூட இந்த ஹார்மோன் கலகத்திற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே. இந்த ஹார்மோன் கலகத்திற்கான மருந்தை மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பது சாத்தியமே. ஒருவேளை, அவர்களுக்குக் காதல் இல்லாமலிருந்தால்!!!
என் பார்வையில் காதல் என்பது…
குழந்தையைப் போன்றது. விரும்பி அள்ளி எடுக்கலாமென்றால், ஓடிப் போய் தள்ளி நின்று, வேடிக்கை காட்டி சிரிக்கும். சீ… வேண்டாம் போ என்றால், நம்மைக் கட்டிக்கொண்டு முத்தங்களை அள்ளி அள்ளி வழங்கும்.

கண்ணாடியைப் போன்றது. நீங்கள் அடித்தால், கைகளைக் கிழித்து சிவப்புச் சாயம் பார்த்து தாகம் தீர்த்துக்கொள்ளும். நீங்கள் சிரித்தால் பதிலுக்குத் தானும் சிரித்து, உங்களை மகிழ்விக்கும்.
உறவுகள் போன்றது.உரிமையாய் சின்ன சின்ன சண்டையிடும். வலிந்து வந்து ஆறுதல் தரும்.
சூரியன் போன்றது. சில நேரம் அனலாய்த் தகிக்கும். சில நேரம் இதமாய் இருக்கும்.
நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்களோ அப்படியே அது. மதம், மனிதம், காமம், குரோதம், இனம்,மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டது காதல். காதல் வலியது. ஆதலினால் காதல் செய்வோம் எல்லா உயிர்களையும்.


காதலைப்பற்றி இந்தக்கட்டுரையில் நன்கு அலசியுள்ளீர்கள்.
புராணம், சரித்திரம், இலக்கியம், கவிதைகள், கதைகள், சினிமா, டிராமா, டி.வி. என காதலைப்பற்றி பேசாதது எதுவுமே இல்லைதான்.
காதல் உணர்வுகள் இல்லையேல் இந்த அழகானதொரு
உலகமே இல்லை என்று சொல்லலாம்.
காடுகள், மரம் செடி கொடிகள், பழங்கள், பூக்கள் என பசுமையானவற்றையும் கண்ணுக்குக் குளுமையானவற்றையும் காதல் உணர்வுகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தக்காதல் உணர்வுகள் மட்டும் இல்லாவிட்டால், பூமி முழுவதுமே வறண்ட பாலைவனங்களாகவும், எரிமலைகளாகவும் மாறி மனிதர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, ஒருவரையொருவர் வெட்டி சாய்த்திட வைத்திருக்கும்…
மனிதர்களில் பலர் மனிதாபிமானத்தோடு வாழவும்
அதே மனிதர்களில் சிலர் மிருகங்களாக மாறவும்
இந்தக்காதலே காரணமாய் இருக்கிறது..
ஆக்கத்திற்கு மட்டுமல்லாமல் அழிவிற்கும் பல நேரங்களில்
இந்தக்காதலே காரணமாயிருந்து விடுகிறது,
————————————————————————-.
தாங்கள் ஆரம்ப வரிகளில் சொல்லியுள்ள
//காதல்…
மூன்றெழுத்தில் ஒரு சுகானுபவம்…
மூன்றெழுத்தில் ஒரு பிரளயம்…
மூன்றெழுத்தில் ஒரு பெரும் பிரச்சினை…
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்,
அவரவர் விருப்பத்தையும்,
அனுபவத்தையும் பொருத்து.// என்பதே உண்மை.
————————————————————————-
தாங்கள் கடைசி வரிகளில் சொல்லியுள்ள
//நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்களோ அப்படியே அது. மதம், மனிதம், காமம், குரோதம், இனம்,மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டது காதல்.
காதல் வலியது//
இதுவும் OK தான்..
————————————————————————-
//ஆதலினால் காதல் செய்வோம் எல்லா உயிர்களையும்.//
இங்கு மட்டும்
“காதல்” என்பது ”அன்பு” என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆதலினால் அன்பு செய்வோம் எல்லா உயிர்களையும்!
))))
————————————————————————–
காதல் உணர்வுகளைப்போன்றே அழகான பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் vgk.
நன்றி சார். ஆதலினால் காதல் செய்வோம் என நான் சொன்னது, அன்பு செய்வோம் என்ற பொருளில் தான் சார். மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் காதல் தவிர ஏதாவது யோசிக்கலாம்னா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு சார். அதான், விட்டில் பூச்சி மாதிரி அதையே சுத்திக்கிட்டிருக்கேன்.
கவிதை நடையில் காதலை பற்றிய கட்டுரை அருமை !
#காதல்…
மூன்றெழுத்தில் ஒரு சுகானுபவம்…
மூன்றெழுத்தில் ஒரு பிரளயம்…
மூன்றெழுத்தில் ஒரு பெரும் பிரச்சினை…#
நான் ரசித்த வரிகள் , வாழ்த்துக்கள் !
நன்றி அனந்து…
நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்களோ அப்படியே அது